Saturday 5 October 2013

ஊனுடலே வாகனம்.



 
 
ஊனுடலே வாகனம்.
 
நாம் சமுதாயத்தில் ஓர் அங்கம். இந்த உடல் சமுதாயத்தின் சொத்து. அதனைக் கெடுப்பதற்கு நமக்கு அதிகாரம் இல்லை. இந்த உடலுக்குள்ளாக நாம் சமுதாயத்தில் கடன் பட்டிருக்கிறோம். மற்றம் அன்றாட அனுபோகப் பொருட்களையும் அதனிடமிருந்து பெற்று  அனுபவித்து வருகிறோம். இந்தக் கடனை திருப்பிப் தரும் வழியே கடமை எனப்படுகிறது.
 
அவர்களது உடலாற்றலையும், அறிவாற்றலையும் அந்தந்த நேரத்திற்கும் சூழ்நிலைக்கும் ஏற்றபடி குறைவில்லாமல் சமுதாய நலத்திற்கு அர்ப்பணமாகச் செலவிடல் தான் கடமை. உடலைக் கொண்டு தான் இந்தக் கடமையை ஆற்ற வேண்டும்.
 
உடல் நலக்குறைவு ஏற்படும் போதும், நலிவுற்ற போதும் சமுதாயம் நம்மை கவனிக்க வேண்டி வந்து விடுகிறது. இதனால் சமுதாயத்திற்கு வர வேண்டிய வரவும் நின்று போய் மருந்தென்றும் உப சரணை என்றும் நம்மால் சமுதாயத்திற்கு இழப்பு உண்டாகிறது. எனவே தான், கடமையை வகைப்படுத்தும் போது உடல், குடும்பம், சுற்றம் ,ஊர், உலகம் என்று உடல் கடைமைகளை மற்றவற்றின் முன்னால் வைக்கப் பட்டது.
 
இனி ஆன்மீக நோக்கில் உடல் நலத்தின் அவசியத்தை ஆராயலாம். இதுவரை மனிதனிடம் ஏற்பட்டுள்ள களங்கங்கள், பாவப்பதிவுகள் நீங்கினால் தான் உயிருக்கு வீடு பேறு, விடுதலை கிடைக்கும். பாவப்பதிவுகள் எப்படிப்போகும்? உடலை எடுத்தால் தான்  அந்தப் பாவம் பதிவுகள் துன்பமாக அனுபோகமாகி நீங்கும் அல்லது யோக சாதனைகள் மூலம் நீக்கிக் கொள்ளலாம். அதற்குத்தான் இந்த உடலை உயிர் எடுத்து வந்தது. உயிர் தன் மூலத்தை அறிந்து கொள்ள எடுக்கின்ற முயற்சிக்கும் இந்த உடல் தேவைப்படுகிறது.  ஆகவே உடலை உயர்வாகக் கருதி சீர் கேடு அடையாமல் போற்றிப் பாதுகாக்க வேண்டும். அப்போது தான் ஆன்மீகப் பயணம் தடைபடாமல் இருக்கும்.
------------------------------------------------------------------------------------------அருள் தந்தை.
வாழ்க வையகம் -----------------------------------------------------------வாழ்க வளமுடன். 
-------------------------------------------------------------------------------------(தொடரும்)

Thursday 13 June 2013

ஆசைநிறைவேறும்.



 
 
ஆசைநிறைவேறும்.
 
ஆசை எழும்போது, அதாவது ஏதோ ஒரு பொருளை நாம் விரும்பும் போது அறிவிலே விழிப்போடு இருக்கவேண்டும். தவறினால் பல தீய விளைவுகள் உண்டாகும். வாழ்க்கையில் எளிதில் தீர்க்கமுடியாத பல சிக்கல்கள் தோன்றிவிடும். ஒரு பொருள் மீது ஆசை எழும் போது அதனோடு உறவுகொண்டு, கண்டமுன்அனுபவம், தற்காலச்சூழ்நிலை, எதிர்கால விளைவு இம்மூன்றையும் ஒன்றிணைத்து நோக்கவேண்டும். அப்போதுதான் அறிவு தனது நிலை பிறழாது, மயக்க முறாது, நலம் என உணர்ந்தால் அளவோடு, முறையோடு அப்போருளைப் பெறவும், துய்க்கவும் முயலவேண்டும். அறிவில் விழிப்போடு இருக்கும் வரையில் மாணாமன நிலை என்பது எது?
 
ஒருவருக்குப் பலபொருட்கள் மீது விருப்பம் எழலாம். அவற்றை வரிசையாகக் குறித்துக் கொள்ள வேண்டும். குறிப்பிட்ட ஒரு பொருளின் தேவை இன்றியமையாததா, அதனை அடையத் தனது ஆற்றலும், சூழ்நிலைகளும் ஒத்து இருக்கின்றனவா? கணிக்கும் அல்லது எதிர் பாக்க்கும் விளைவுகள் என்ன? இவற்றைக் கொண்டு சிந்தனை செய்யுங்கள்.
 
தேவையும், ஆற்றலும், சூழ்நிலையும், விளைவாகக் காணும் நலனும் ஒத்திருந்தால் அதனை அடைய முறையான முயற்சியை உருவாக்கிக் கொள்ளுங்கள். செயலாற்றி வெற்றி பெறுங்கள். இல்லையெனில், ‘இன்னின்ன நிலைமைகளால் இந்தப் பொருள் மீது ஆசை கொள்ளுதல் தவறு, எனவே இந் தஆசையை நான் நீக்கிக் கொள்கிறேன்’ என்று பல தடவை காலை, மாலை அதற்கென உட்கார்ந்து தானே மனதிற்குள் உறுதி கூறிக் கொள்ள வெண்டும்.சில குறிப்பிட்ட பொருட்களைப் பற்றி இவ்வாறு முடிவு செய்து கொண்டால் மீண்டும் பிற பொருள் மீது முறையற்ற அவா எழாது. நலம் தரும் பொருட்களைப் பெறத் தேவையான ஆற்றலும் நன்கு வளர்ச்சி பெறும். அடுத்தடுத்து வாழ்வில் வெற்றிகள் பல கிட்டும். வாழ்வில் முழு அமைதியும் பெறலாம். இவ்வழியில் ஆசையை முறைப் படுத்திக் கொள்ள வேண்டும்.
-----------------------------------------------------------------------------------------அருள்தந்தை.
வாழ்கவையகம்-------------------------------------------------------வாழ்கவளமுடன்.
---------------------------------------------------------------------------------------(தொடரும்)
 

Thursday 23 May 2013

மனதின் பத்துப் படிகள்.



 
மனதின் பத்துப் படிகள்.
 
உடலை அடக்குவது உயிரின் வேலை. அதனைப் பாதுகாத்து, அணு அடுக்குச் சீர்குலையாமல் தடை வரும் போது, அதை உணரும் போது மனமாக விரியும் போது, உணர்ந்த தடையை நீக்க முயல்வது உயிரின் இரண்டாவது வேலையாகும், தடையால் உணர்ச்சி ஏற்படவே அதனைப் போக்கப் பொருள் அல்லது சூழ்நிலை அல்லது நட்பு வேண்டும்.அப்போது தேவை உருவாகிறது.உணர்ச்சியாக மாறி நிற்பதும் தேவையாக எழுந்து நிற்பதும் உயிர்தான்.
 
தேவை ஏற்படவே அதைச் சமன் செய்ய – முயற்சி தோன்றுகிறது.முயற்சியின் காரணமாகச் செயல் மலர்கிறது.செயலானது இயற்கை ஒழுங்கமைப்பின்படி விளைவு தருகிறது.விளைவை உயிரானது அனுபோகம் ஆகப் பெறுகிறது.அனுபோகத்திலிருந்து இன்ன செயல் செய்தால் இன்ன விளைவு வரும்.அதனால் இன்ன அனுபவத்தைப் பெறலாம் என்ற அனுபவத்தை உயிர் பெறுகிறது.
 
உயிர் மேற்கொள்ளும் ஆராய்ச்சி, அதன்பின் இன்னவிதமான சூழ்நிலையில்  இன்னவிதமாக உணர்ச்சி தோன்றியதனால் இன்னவிமாகச் செயல்படவேண்டும் என்று ஒரு தெளிவினைப் பெறுகிறது. இறுதியாக எல்லாவற்றையும் தொகுத்து ஒரு முடிவினையும் உயிர் செய்து வைத்துக் கொள்கிறது.எனவே, உயிரே உணர்ச்சி, தேவை, முயற்சி, செயல் விளைவு, அனுபோகம், அனுபவம், ஆராய்ச்சி, தெளிவு, முடிவு என்ற பத்துக் கட்டமாக உயர்ந்து படர்ந்து நிற்கிறது.
 
எனவே, உயிரினது படர்க்கை நிலை ஆற்றல் தான் மனம், ஆங்கிலத்தில் (Psychic extension of the life energy is mind) எனலாம். உடல் வரையில் இன்ப துன்ப அனுபோகங்களில் குறுகி நில்லாமல் ஆன்மா பற்றியும், இறைவனைப் பற்றியும் ஆராய உயரும் நிலையில் இந்த மனதையே அறிவு என்கிறோம்.
--------------------------------------------------------------------------------------------------அருள் தந்தை.
வாழ்க வையகம்.-------------------------------------------------வாழ்க வளமுடன்.
-------------------------------------------------------------------------------(தொடரும்)

Thursday 16 May 2013

சாதனை வழி.



 
சாதனை வழி.
 
இன்றைய உலக சமதாயச் சூழ்நிலையில் விரிந்த கண்ணோட்டத்தோடு மக்களுக்குத் தொண்டு முறையில் ஆன்மீக அறிவை ஊக்குவிக்கவும், அதனைத் தடுத்துக் கொண்டிருக்கும் கற்பனைப் புகையையும், துன்பங்கள், சிக்கல்கள் இவற்றைக் குறைப்பதற்காகவும் திட்டமிட்டுத் தொடங்கப் பெற்ற நிறுவனமே உலக சமுதாய சேவா சங்கமும் அதன் செயல் வழியாகிய மனவளக்கலையுமாகும். கர்மயோகம் என்னும் வாழ்க்கை நெறியை மக்கள் பண்பாடாக வளர்ப்பது சிறந்த தோர் சீர்திருத்தத் திட்ட மாகும்.
 
சிந்தனையை வளர்க்கவும், அறிவிற்கு நுண்மை, கூர்மை, உறுதி, தெளிவு இவற்றையளித்து அமைதியை உருவாக்க வல்ல அகத்தவமுறை இதில் இருக்கிறது.நான் என்ன செய்கிறேன்.இதனால் என்ன விளைவு ஏற்படும் என்பதையுணர்ந்து நல்லன தேர்ந்து செயலாற்றும் பண்பாட்டை வளர்க்க அகத்தாய்வுப் பயிற்சி இருக்கிறது.நோய்களைப் போக்கிக் கொள்ளவும், நோய் வராமல் காக்கவும் ஏற்ற உடல் பயிற்சியும், உடலோம்பும் அறிவுப் பாடல்களும் உள்ளன.
 
விளைவறிந்து செயலாற்றும் விழிப்பு நிலையின் ஒவ்வொரு செயலிலும் இறையுணர்வைப் பெற்று, அறவழி வாழ்வும் ஏற்ற கர்மயோக நெறி நிற்கும் வாழ்க்கை முறையும் இருக்கின்றன. பிறவிப்பயனாகிய அறிவை அறிய இறைநிலையோடு ஒன்று கலந்து பேரின்ப வாழ்வினை அனுபவிக்க ஏற்ற அறிவு விளக்கப் பயிற்சியும், வாழ்வு முறையும் உள்ளன. தன் தகுதியை விளக்கிக் கொண்டும், அதை வளர்த்துக் கொண்டும், தன்னம்பிக்கையோடு வாழ்வை நடத்த அச்சமின்மையும், தகைமையும் வளர்த்துக் கொள்ள ஏற்ற ஆக்க முறை வாழ்க்கை நெறி இருக்கிறது. பொதுவாகவும், சுருக்கமாகவும் சொல்லுமிடத்து மனிதன், மனிதனாக வாழ, ஏற்ற ஒரு சாதனை மனவளக்கலை ஆகும்.
------------------------------------------------------------------------------------------------அருள்தந்தை.
வாழ்க வையகம். ---------------------------------------------------வாழ்க வளமுடன்.
 
 

Tuesday 23 April 2013

தற்காலத்திற்கேற்ற உடற்பயிற்சி.

 
 
தற்காலத்திற்கேற்ற உடற்பயிற்சி.
 
நினைவுக்கு எட்டாத காலமுதற்கொண்டே பருவநிலை, வாழ்க்கை முறை, இன்னும் இதர பழக்க வழக்கம் ஆகியவற்றைக் கொண்டு பல்வேறு நாடுகளில் பலவகையான உடற்பயிற்ச்சிகள் உருவாகியுள்ளன. முன்பு வாழ்க்கை முறை மெதுவாக ஊரும் (நகரும்) நிலியில் இருந்த தால் அதற்குத் தக்கவாறு உடற்பயிற்சிகள் உருவாக்கப்பட்டன. அந்தக் காலம் இப்போது மாறிவிட்டது. விரைவு, அழுத்தம், பரபரப்பு உள்ள சூழ்நிலையில் நாம் வாழ்கிறோம். நமது தேவைகளும் வேறு விதமாகி விட்டன. ஆகவே, முந்தைய உடற்பயிற்சிகள் இந்தக்கால சூழ்நிலைகளுக்கு ஏற்றவையாக.
 
இது சம்பந்தமாகப் பல ஆண்டுகள் நான் சிந்தித்து வந்தேன். பல விதமான ஆசனங்களையும், உடற்பயிற்சிகளையும் ஆராய்து பார்த்தேன். இப்பயிற்சிகளை நானே செய்து பார்த்து அதன் விளைவுகளை எனது உடல் மூலம் தெறிந்து கொண்டேன். இந்திய மருத்துவத் துறையில் எனக்கு இருந்த அறிவு இந்த ஆய்வுக்கு உதவியது. இருதியாக ஆடவருக்கும், பெண்டிருக்கும், குழந்தைகளுக்கும், பல்வேறு வாழ்க்கை நிலையில் இருப்பவர்களுக்கும், பல் வேறு கால நிலைக்கும் ஏற்றவாறு சில பயிற்சிகளை ஒழுக்கு படுத்தியுள்ளேன். இந்தப் பயிற்சிகளை ஒழுங்காகச் செய்வதால் உடலுக்குப் பிராணவாயு பரவி என்டோக்கிரின் சுரபிகள் இயக்கத்தை ஒழுங்கு படுத்தி, இரத்தத்தை சுத்தப்படுத்தி அதன் ஓட்டத்தை ஒழுங்கு படுத்துகிறது.
 
நோய் வராதபடி தடுப்பு நிலையை அதிகப்படுத்துகிறது. ஆரோக்கியமான உடம்பும், நீடித்த ஆயுளும் உண்டாகின்றன. அதன் மூலம் ஆனமீக தேட்டத்தில் வெற்றி பெற்று நான் இந்த மண்ணுக்கு எதன் பொருட்டு வந்தோமோ அதைத் தெளிவாகத் தெரிந்து  கொள்கிறோம். இந்தப் பயிற்சிகளை ஒழுங்காகச் செய்பவர்கள் நிச்சையம் நன்மை அடைவார்கள். எளிய முறை குண்டலினி யோகப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளவர்கள் இந்தப் பயிற்சிகள் செய்து பழகுவதன் மூலம் பெரும் அளவில் நன்மை அடையலாம். இந்தப் பயிற்சிகள் அதற்கு அதிக அளவு உதவியாய் இருக்கும்.
--------------------------------------------------------------------------------------------------------அருள் தந்தை.
 
வாழ்க வையகம்.------------------------------------------------------------------------------- வாழ்க வளமுடன். 
தொடரும்.