Thursday 16 May 2013

சாதனை வழி.



 
சாதனை வழி.
 
இன்றைய உலக சமதாயச் சூழ்நிலையில் விரிந்த கண்ணோட்டத்தோடு மக்களுக்குத் தொண்டு முறையில் ஆன்மீக அறிவை ஊக்குவிக்கவும், அதனைத் தடுத்துக் கொண்டிருக்கும் கற்பனைப் புகையையும், துன்பங்கள், சிக்கல்கள் இவற்றைக் குறைப்பதற்காகவும் திட்டமிட்டுத் தொடங்கப் பெற்ற நிறுவனமே உலக சமுதாய சேவா சங்கமும் அதன் செயல் வழியாகிய மனவளக்கலையுமாகும். கர்மயோகம் என்னும் வாழ்க்கை நெறியை மக்கள் பண்பாடாக வளர்ப்பது சிறந்த தோர் சீர்திருத்தத் திட்ட மாகும்.
 
சிந்தனையை வளர்க்கவும், அறிவிற்கு நுண்மை, கூர்மை, உறுதி, தெளிவு இவற்றையளித்து அமைதியை உருவாக்க வல்ல அகத்தவமுறை இதில் இருக்கிறது.நான் என்ன செய்கிறேன்.இதனால் என்ன விளைவு ஏற்படும் என்பதையுணர்ந்து நல்லன தேர்ந்து செயலாற்றும் பண்பாட்டை வளர்க்க அகத்தாய்வுப் பயிற்சி இருக்கிறது.நோய்களைப் போக்கிக் கொள்ளவும், நோய் வராமல் காக்கவும் ஏற்ற உடல் பயிற்சியும், உடலோம்பும் அறிவுப் பாடல்களும் உள்ளன.
 
விளைவறிந்து செயலாற்றும் விழிப்பு நிலையின் ஒவ்வொரு செயலிலும் இறையுணர்வைப் பெற்று, அறவழி வாழ்வும் ஏற்ற கர்மயோக நெறி நிற்கும் வாழ்க்கை முறையும் இருக்கின்றன. பிறவிப்பயனாகிய அறிவை அறிய இறைநிலையோடு ஒன்று கலந்து பேரின்ப வாழ்வினை அனுபவிக்க ஏற்ற அறிவு விளக்கப் பயிற்சியும், வாழ்வு முறையும் உள்ளன. தன் தகுதியை விளக்கிக் கொண்டும், அதை வளர்த்துக் கொண்டும், தன்னம்பிக்கையோடு வாழ்வை நடத்த அச்சமின்மையும், தகைமையும் வளர்த்துக் கொள்ள ஏற்ற ஆக்க முறை வாழ்க்கை நெறி இருக்கிறது. பொதுவாகவும், சுருக்கமாகவும் சொல்லுமிடத்து மனிதன், மனிதனாக வாழ, ஏற்ற ஒரு சாதனை மனவளக்கலை ஆகும்.
------------------------------------------------------------------------------------------------அருள்தந்தை.
வாழ்க வையகம். ---------------------------------------------------வாழ்க வளமுடன்.
 
 

No comments:

Post a Comment