Wednesday 5 October 2011

தவம்






தவம் என்னும் யோகமானது மனித வாழ்வுக்கு இன்றியமையாத வாழ்க்கை நெறி. இதன் மதிப்புணர்ந்த பெரியோர்கள் தங்கள் வாழ்நாளை அர்ப்பணம் செய்து மனித குலத்துக்கென உருவாக்கி போற்றிக் காத்துத் தேவையும், தகுதியும் உள்ளவர்க்கு உதவி செய்தனர். தற்காலத்தில் வாணிப நோக்கமுள்ள பலரால் யோகத்தின் கருத்தும், செயல் முறைகளும், விளைவுகளும் திரித்துக் கூறப்படுகின்றன, பரவலாகப் போதிக்கப்பட்டும் வருகின்றன.

மாயாஜாலங்களைப் புரிந்து, மக்களை மயக்கவல்ல அற்புத ஆற்றல்களை அளிக்கும் பயிற்சி முறையே யோகம் என்றும், தனிமனிதன் பெருமையையும், புகளையும் உயர்த்தும் ஒரு சாதனை தான் யோகம் என்றும் பொதுமக்கள் கருத்துக் கொள்ளுமாறு யோகத்திற்குப் பொருள் கூறப்படுகின்றது. பல இடங்களில் யோகமென்னும் தவத்திற்கு உண்மை வளக்கம் கூறி வருகிறேன். அறிவாளிகள், சிந்தனையாளர்கள் ஏற்றுக் கொள்கின்றனர். உண்மை உணர்ந்த தெளிவிலே மன நிறைவு பெறுகின்றனர்.

மனதை உயிர்மேல் வைத்து பழகும் தியானமோ, அசைவற்று, நினைவற்றிருக்கும் சாதனையோ, பல கோணங்களில் செய்யும் உடற்பயிற்சியோ, தற்சோதனையோ, மாத்திரம் தவம் அன்று. மனிதப் பிறவியின் பெரு நோக்கமும், மதிப்பும் உணர்ந்து அறிவின் நிலை அறிந்து பேரறிவு நிலை எய்தி, புலன்களை ஒழுங்கு படுத்தி ஒழுக்கம், கடமை, ஈகை என்னும் அறநெறிகளை தனதுயல்பாகக் கொண்டு, அயரா விழிப்பு நிலையோடு தானும் வாழ்ந்து, பிறரையும் இனிதாக வாழ வைக்கும் உயர் வாழ்வே தவம் ஆகும்.

இத்தகைய பண்பாட்டுக்குத் தன்னைத் தகுதியாக்கிக் கொள்ளும் பயிற்சி முறைகளே தியானம்,  தற்சோதனை, உடற்பயிற்சி, அறநெறி விளக்கிக் கொள்ளும் போதனை, வேதாந்த விளக்கங்களை இவையாவுமாகும். இவை எல்லாம் வழிகளே. முடிவு, அறவை அறிந்த பேரறவாழ்வாகும்.

----------------------------------------------------------------------அருள் தந்தை.

வாழ்க வையகம் ------------------------------------வாழ்க வளமுடன்
----------------------------------------------------------------------(தொடரும்)

No comments:

Post a Comment